மழைத்துளிக்கும் மணல்வெளிக்குமான உறவு..
தூரம் சார்ந்ததன்று..
ஈரம் சார்ந்தது..
உனக்கும் எனக்குமான பிணைப்பு..
பருவம் சார்ந்ததன்று..
பிரியம் சார்ந்தது
மழைத்துளிக்கும் மணல்வெளிக்குமான உறவு..
தூரம் சார்ந்ததன்று..
ஈரம் சார்ந்தது..
உனக்கும் எனக்குமான பிணைப்பு..
பருவம் சார்ந்ததன்று..
பிரியம் சார்ந்தது
மத்தியில் வேறு மொழி
கொண்டிருக்கும் காரணத்தால்
ஆதிமொழித் தாய்மொழியை
தாங்கி நிற்கும் இனமழிக்க
ஆட்சி இங்கு நினைக்குது..
அண்டைதேசம் வாழும்
அருமைச் சொந்த பந்தங்களை
கூடி இனமழிக்க
ஆதரவும் கொடுக்குது..
சொந்ததேச மக்கள் குரல்
கேட்டிராமல் மவுனித்து
எம்மொழியை வீழ்த்திடவே
பள்ளம் பல பறிக்குது..
உம் பாட்டனுக்கும் பாட்டனையும்
அவனுக்கும் பாட்டனையும்
பார்த்த மொழி எங்கள் மொழி..
பதம் குறையா தங்க மொழி..
எத்தனை இடர் வரினும்
சலிக்காது தாங்கி நிற்கும்..
மொத்தமாய் தடையறுத்து
தனித்துவமாய் ஓங்கி நிற்கும்..
அது நடக்கும்.. அப்பொழுது..
ஓரமாய் ஒடுங்கி நின்று..
கைக்கட்டி வாய் பொத்தி..
அடங்கி ஒடுங்கி திராணியற்று..
பாவமாய் பார்ப்பீர்கள்
பாழாய்ப்போன மவுனிகளே..
வெல்லும் இந்தப் போராட்டம்..
காண்பது வெறும் வெள்ளோட்டம்..
விரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..
புதிதாய் விதியை அது மாற்றும்..
உணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…
காற்று மொழி பெயர்க்கும்..
கடல் காற்று மொழி பெயர்க்கும்..
கூந்தல் அலைந்தவிழ்ந்து..
உன் கூந்தல் முகந்தவழ்ந்து..
கூறும் வார்த்தைகளை..
கூறாத வார்த்தைகளை..
வாங்கி மனம் குதிக்கும்..
உள்வாங்கி மனம் குதிக்கும்..
ஒரக் குறுஞ்சிரிப்பால்..
விழியோரக் குறுஞ்சிரிப்பால்..
ஈர்க்கும் உனையணைக்க..
உயிரீர்க்கும் உனையணைக்க..
தாவி அடம் பிடிக்கும்..
எனதாவி அடம் பிடிக்கும்..
மை கண்ணழகின்..
இமைக் கண்ணழகின்..
இடையில் தொலைந்துவிட..
மெல்லிடையில் தொலைந்துவிட..
வைக்கும் உன் நளினம்..
தீ வைக்கும் மென் நளினம்..
நீளும் முடிவிலியாய்..
கதி நீளும் முடிவிலியாய்..
தொடரும் எதுவரையும்..
பின் தொடரும் அதுவரையும்..
பிரியத் தோடென் வரியும்..
ஜனித்த விதை
முளைத்து வளர்ந்து
செழித்தச் செடியென
கிளை விரித்து எழும் முன்..
முளையில் முறிதல்
எத்தனை துயரம்..
பத்து மாதமும்
பார்த்துப் பார்த்து..
கருவறையில்
காத்துச் சுமந்து..
பிறந்ததில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்..
உயிரறையில்
ஊற்றிக் கலந்து..
மூச்சென சேர்த்து வளர்த்த..
முழுப்பாசம் வார்த்து வளர்த்த..
மென்மழலை மாறா
இளந்தளிர்ச் சிறு மகளை..
சட்டென வந்து
சாவு கொண்டு போகுதெனில்..
சாவுன்னைச் சாகடிக்க
வரமெனக்கு வாராதா..
குழந்தைகள் மரணிக்கிற நொடியில்
கடவுளுக்கு இதயமில்லை..
குழந்தைகளை மரணிக்கிற வரையில்
கடவுளே இல்லை இல்லை..
உடலெடுத்தும் உதவாத
உயிர் வாழவே கூடாத..
ஜீவன்களோ நிறைய உண்டு உலகிலே..
பால் மணம் மாறாத..
சூதொன்றும் அறியாத
பிள்ளை உயிர் கொள்ளாதே காலனே..
தோழியவள் கண்ணீரின்
சூடு தாங்கா கவி நெஞ்சு..
வேதனை தாளாது
கட்டளை ஒன்றிடுகிறது..
ஈடு செய்ய முடியாத
இழப்பிற்கு மருந்தாய்..
வலி கொண்ட இதயம்
இளைப்பாற அவள் வாழ்வில்..
மாறுதலும் நிம்மதியும்
தந்துவிடு காலமே.. – கண்ணீர்
துடைத்து.. கை கொடுத்து..
தேற்றிவிடு காலமே..
பிரியத்தோழி காயத்திரியின் காயத்திற்கும்…
அவள் அருமகளின் ஆத்மாவிற்கும்…
கொன்றுத் தீர்ப்பது என
முடிவெடுத்த பிறகு..
குழந்தைகள் என்ன..
பெண்கள் என்ன..
பெரியவர்கள் என்ன..
மொத்தம் அழிப்பது என
துணிந்துவிட்ட பிறகு..
பூக்காடு என்ன..
முட்காடு என்ன..
பறவைக் கூடு என்ன..
கூறு போட்டு.. கூட்டம் கூட்டி..
திட்டமிட்ட.. எண்ணப்படி..
மிச்சமின்றி உங்களால்..
ஒட்டுமொத்தம் தேடித்தேடி..
வேரறுத்தல் நடக்கும்.. – இந்த
சகமழித்தல் பலிக்கும்..
மொத்தத்தையும் அழித்தாலும்..
மீதமின்றி முடித்தாலும்..
அணுவணுவாய் சிதைத்தாலும்..
அத்தனையும் புதைத்தாலும்..
ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒன்று மட்டும் நிச்சயம்..
எவ்விதமோ.. எப்படியோ..
எவ்விடமோ.. எக்கணமோ..
வீரியத்தை சுயத்தில் கொண்ட..
விடுதலையை உயிர்ப்பில் கொண்ட..
விதை வெடித்து முளைக்கும்..
விருட்சமென நிலைக்கும்..
களைகள் யாவும் மரிக்கும்..
மீண்டும் பூமி சிரிக்கும்..
( பாலச்சந்திரனின் ஆத்மாவுக்கும்…
பாவிகளின் கர்மாவிற்க்கும்… )
ஒழுங்கென்று சொல்லி
அதை அதை அந்தந்த இடத்தில்
அப்படி அப்படியே வைத்த
ஒழுங்கீனங்களை எல்லாம்..
பிஞ்சுக் கரங்களால்
உன் இஷ்டத்திற்கு
அங்கும் இங்குமாய்
கலைத்துப் போட்ட பிறகுதான்..
உண்மையில்
அழகாகிறது வீடு..
புணர்ச்சி என்பது
உடல் கரைந்து
உயிர் நிறைந்து திளைக்கும்
புனித உணர்ச்சி..
இரண்டு மனங்கள்
இணைந்த அன்பின்
உச்சகட்ட கிளர்ச்சி..
காட்டு வெள்ளமாயினும்
பள்ளம் நோக்கித்தான்
பாயும்..
மிருகங்கள் கூட
துணை நிலை கண்டே
புணரும்..
வெள்ளைத்துளி கொட்ட
விரிசல் கிடைத்தால்
போதுமென்றலையும்
இச்சை வெறிகளின்
விந்துப் பை
பிய்த்தெடுப்போம்..
மங்கையுடல் தின்ன
மதி கெட்டலையும்
காமப் பேய்களின்
உயிர்க் குறியை
அறுத்தெறிவோம்..
உலவி தரி கெட்டு
கலவி காணத் துடிக்கும்
அசுத்தக் கண்களை
ஆயிரம் துண்டுகளாய்
கிழித்தெடுப்போம்..
வதை செய்து வன்புணர்வை
வேரோடு எடுத்தெரிப்போம்..
மலரட்டும் மனிதநேயம்..
மணக்கட்டும் உண்மைப் பாசம்..
நிலா நிலா ஓடி வா என்கிறது தமிழ்..
rain rain go away என்கிறது ஆங்கிலம்..
அன்பிற்கான ஆதாரமாய்
அம்மாவில் தொடங்குகிறது தமிழ்..
ஆதாம் ஏவாள் தவறுக்கான
ஆப்பிளில் தொடங்குகிறது ஆங்கிலம்..
என்றாலும் நமக்கு நம் பிள்ளைகள்
அம்மா அப்பா என்று அழைத்தால் கோபம்
மம்மி டாடிதான் சந்தோசம்..
வாழ்க தமிழ் மக்கள்..
வளர்க தமிழினம்..
.
எதிர் திசையில் நீ வருகிறாய்
சூரியனை பின்னால் வைத்துக்கொண்டு..
உனது பிம்பம் எங்கும் நிறைந்து வழிந்து
சின்னதாய் சிதறி ஜொலிக்கின்றன
இளங்கதிர்கள்
அந்த மென் காலை வேளையில்..
அசைந்து வருகிறாயா மிதந்து வருகிறாயா
உறுதியாய் சொல்ல முடியாத
ஒரு காட்சிக் குழப்பம் அது..
பக்கம் வர வர
பசுமை கூடி பச்சையம் கூடி
பல வண்ணங்களில் பூக்கின்றன
என் தோட்டப் பூக்கள்..
வருவது நிஜமா என
ஒரு சின்ன மின்னல்
நெஞ்சில் வெட்டி மறைய..
கிள்ளிக் கொண்டேன் என்னையே..
நிஜமான அந்த வலி
சுகமானதாய் இருந்தது..
நீ நெருங்க நெருங்க
உனக்குப் பின் இருக்கும் சூரியன்
உயரே உயரே சென்று கொண்டு இருக்கிறான்..
உனக்காய் நானும் எனக்காய் நீயுமென
புரிந்த புரிதலில்..
எதுவும் பேசாமல் உச்சத்தில் இருந்து
உன்னையும் என்னையும் பார்த்து
சில்லென சிரித்தபடி..
You must be logged in to post a comment.