ஜனித்த விதை
முளைத்து வளர்ந்து
செழித்தச் செடியென
கிளை விரித்து எழும் முன்..
முளையில் முறிதல்
எத்தனை துயரம்..
பத்து மாதமும்
பார்த்துப் பார்த்து..
கருவறையில்
காத்துச் சுமந்து..
பிறந்ததில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்..
உயிரறையில்
ஊற்றிக் கலந்து..
மூச்சென சேர்த்து வளர்த்த..
முழுப்பாசம் வார்த்து வளர்த்த..
மென்மழலை மாறா
இளந்தளிர்ச் சிறு மகளை..
சட்டென வந்து
சாவு கொண்டு போகுதெனில்..
சாவுன்னைச் சாகடிக்க
வரமெனக்கு வாராதா..
குழந்தைகள் மரணிக்கிற நொடியில்
கடவுளுக்கு இதயமில்லை..
குழந்தைகளை மரணிக்கிற வரையில்
கடவுளே இல்லை இல்லை..
உடலெடுத்தும் உதவாத
உயிர் வாழவே கூடாத..
ஜீவன்களோ நிறைய உண்டு உலகிலே..
பால் மணம் மாறாத..
சூதொன்றும் அறியாத
பிள்ளை உயிர் கொள்ளாதே காலனே..
தோழியவள் கண்ணீரின்
சூடு தாங்கா கவி நெஞ்சு..
வேதனை தாளாது
கட்டளை ஒன்றிடுகிறது..
ஈடு செய்ய முடியாத
இழப்பிற்கு மருந்தாய்..
வலி கொண்ட இதயம்
இளைப்பாற அவள் வாழ்வில்..
மாறுதலும் நிம்மதியும்
தந்துவிடு காலமே.. – கண்ணீர்
துடைத்து.. கை கொடுத்து..
தேற்றிவிடு காலமே..
பிரியத்தோழி காயத்திரியின் காயத்திற்கும்…
அவள் அருமகளின் ஆத்மாவிற்கும்…