பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்..
பள்ளிப் பருவத்து தீபாவளிகள்..
கல்லூரிக்கால தீபாவளிகள்..
இளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை
இந்த வருட தீபாவளி !
இது கொஞ்சம் வித்தியாசமானது..
நிறைய புதுமையானது !
விடியற்காலையிலேயே எழுந்து குளித்து..
ஈரத்தை துவட்டி.. நடு வகிடெடுத்து..
பொட்டுக் குங்குமம் வைத்து..
தழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..
கூந்தல் நிறைய பூக்கள் சொருகி..
தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..
என்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் ?
என வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்
மனைவியானாலும் மாறாத என் காதலி !
என்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்
எவ்வளவு ஆசை அவளுக்கு !
எப்போதும் என் பக்கத்திலேயே
என்னையேச் சுற்றி சுற்றி
வந்து கொண்டிருந்தவள்..
நான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த
அந்தப் பொழுதில் மட்டும்
நிற்கிறாள் பயத்தோடு விலகி..
வீட்டு பூஜை முடித்து..
பலகாரம் பகிர்ந்துண்டு..
பக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..
வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு
வர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து
அணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..
அவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்
நான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக
இன்னும் பயப்படுவதாய் நடித்து..
மாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..
இருட்டியதும் வானவேடிக்கைகள் ரசித்து..
கம்பி மத்தாப்புகளின்.. புஷ்வானங்களின்..
சங்குச் சக்கரங்களின்.. வெளிச்சத்தில்
அவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..
இதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான
பரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..
கடல் பார்த்து தனிமையோடு
அமர்ந்திருக்கும் பொழுதில்
அலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..
எப்போதாவது கிடைக்கும்
அரிய பொக்கிஷ தினம் இது..
நான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்
என்னை மட்டும் சார்ந்தது..
இது என்னோடு இணைந்த
ஒரு பெண்ணையும் சேர்ந்தது..
இது இதுவரை இல்லா தீபாவளி..
நான் இதுவரைக் காணா தீபாவளி..
இதயத்தில் மழை தூறும் தீபாவளி..
மனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..
ஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..
துள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..
ஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..
இருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி..
தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.
You must be logged in to post a comment.