நல்வரவு !

ஜூன் 19, 2008

பிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள் !

பிரியன் பக்கங்கள் என்ற தலைப்போடு உயர்ந்துகொண்டிருக்கும் எனது களம் – தமிழுக்கும், கவிதைகளுக்கும், படைப்புகளுக்குமானது…

அஞ்சாதே,  காதலில் விழுந்தேன்,  பந்தயம்,  ௮..ஆ..இ..ஈ..,  
தநா அல 4777,  ரசிக்கும் சீமானே,  நினைத்தாலே இனிக்கும்,  
முன்தினம் பார்த்தேனே,  உத்தம புத்திரன்,  யுவன் யுவதி,  
முரண்,  நான்,  வேலாயுதம் போன்ற…

200 – க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும்…
5 – க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும்…
7 – க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்பு புத்தகங்களுக்கும்…
நிறைய விளம்பர வரிகளுக்கும் இடையில்……….

எனது இரவு தூக்கங்களை கொடுத்து இந்த பக்கங்களை வளர்த்து வருவதற்கு சரியான காரணமுண்டு…

தனது படைப்புகளின் மீதான விமர்சனங்களைக் கொண்டுதான் ஒரு 
படைப்பாளி தன் அடுத்த கட்ட பயணத்தின் திசையை தீர்மானிக்கிறான் !

ஒரு படைப்பாளியாக எனது திரைத்துறை நண்பர்களிடம் இருந்தும்… தமிழ் இலக்கியத்துறை நண்பர்களிடம் இருந்தும், பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் என் படைப்புகள் மீதான கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்…

எல்லாவற்றையும்விட…   எனது படைப்புகளை மட்டுமே தெரிந்த…   என்னைத் தெரியாத…  என் சமூகத்தின்…   சராசரி ரசிகனின்…   ரசிகையின்…   உண்மையான விமர்சனங்களைப் பெறவே நான் விரும்புகிறேன் !

எதிர்பார்த்ததற்கு மேலாக… எனது கவிதைகள் மீதான நிறைவான  விமர்சனங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன !   மகிழ்ச்சி…

நதி போல பயணித்துக்கொண்டே இருப்போம் நமக்கான சுவடுகளை நாளைகளுக்கு விட்டபடி…

  

பிரியமுடன்…
பிரியன்…

 


எழுத்துப்பசிக்கு விருந்து…

மே 23, 2013

வணக்கம்..

பாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும் ஒரு மிகப் பெரிய காரியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

இதை மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின..

இப்போது கைக்கூடிய தருணத்தின் விளிம்பில் இருக்கிறேன்..

மிகப்பெரிய ஆச்சரியமும்.. எதிர்பாரா மகிழ்வும்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு அறிவும்.. வாய்ப்பும்.. அங்கீகாரமும்.. எழுத்துப்பசிக்கு.. பாட்டுப் பசிக்கு ஏற்ற விருந்தும்.. உங்களில் எழுபது பேருக்கு..

காத்திருங்கள்..
தயாராயிருங்கள்..

தகவல்கள்.. மிகமிக விரைவில்…

பிரியமுடன்…
பிரியன்…


சார்தல்…

மே 17, 2013

மழைத்துளிக்கும் மணல்வெளிக்குமான உறவு..
தூரம் சார்ந்ததன்று..
ஈரம் சார்ந்தது..

உனக்கும் எனக்குமான பிணைப்பு..
பருவம் சார்ந்ததன்று..
பிரியம் சார்ந்தது


வெல்லட்டும் போராட்டம்…

மார்ச் 14, 2013

மத்தியில் வேறு மொழி
கொண்டிருக்கும் காரணத்தால்
ஆதிமொழித் தாய்மொழியை
தாங்கி நிற்கும் இனமழிக்க
ஆட்சி இங்கு நினைக்குது..

அண்டைதேசம் வாழும்
அருமைச் சொந்த பந்தங்களை
கூடி இனமழிக்க
ஆதரவும் கொடுக்குது..

சொந்ததேச மக்கள் குரல்
கேட்டிராமல் மவுனித்து
எம்மொழியை வீழ்த்திடவே
பள்ளம் பல பறிக்குது..

உம் பாட்டனுக்கும் பாட்டனையும்
அவனுக்கும் பாட்டனையும்
பார்த்த மொழி எங்கள் மொழி..
பதம் குறையா தங்க மொழி..

எத்தனை இடர் வரினும்
சலிக்காது தாங்கி நிற்கும்..
மொத்தமாய் தடையறுத்து
தனித்துவமாய் ஓங்கி நிற்கும்..

அது நடக்கும்.. அப்பொழுது..
ஓரமாய் ஒடுங்கி நின்று..
கைக்கட்டி வாய் பொத்தி..
அடங்கி ஒடுங்கி திராணியற்று..
பாவமாய் பார்ப்பீர்கள்
பாழாய்ப்போன மவுனிகளே..

வெல்லும் இந்தப் போராட்டம்..
காண்பது வெறும் வெள்ளோட்டம்..
விரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..
புதிதாய் விதியை அது மாற்றும்..

உணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…


நளின முடிவிலி…

மார்ச் 7, 2013

காற்று மொழி பெயர்க்கும்..
கடல் காற்று மொழி பெயர்க்கும்..
கூந்தல் அலைந்தவிழ்ந்து..
உன் கூந்தல் முகந்தவழ்ந்து..
கூறும் வார்த்தைகளை..
கூறாத வார்த்தைகளை..

வாங்கி மனம் குதிக்கும்..
உள்வாங்கி மனம் குதிக்கும்..
ஒரக் குறுஞ்சிரிப்பால்..
விழியோரக் குறுஞ்சிரிப்பால்..
ஈர்க்கும் உனையணைக்க..
உயிரீர்க்கும் உனையணைக்க..

தாவி அடம் பிடிக்கும்..
எனதாவி அடம் பிடிக்கும்..
மை கண்ணழகின்..
இமைக் கண்ணழகின்..
இடையில் தொலைந்துவிட..
மெல்லிடையில் தொலைந்துவிட..

வைக்கும் உன் நளினம்..
தீ வைக்கும் மென் நளினம்..
நீளும் முடிவிலியாய்..
கதி நீளும் முடிவிலியாய்..
தொடரும் எதுவரையும்..
பின் தொடரும் அதுவரையும்..
பிரியத் தோடென் வரியும்..


குழந்தையின் மரணம்…

பிப்ரவரி 26, 2013

ஜனித்த விதை
முளைத்து வளர்ந்து
செழித்தச் செடியென
கிளை விரித்து எழும் முன்..
முளையில் முறிதல்
எத்தனை துயரம்..

பத்து மாதமும்
பார்த்துப் பார்த்து..
கருவறையில்
காத்துச் சுமந்து..

பிறந்ததில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்..
உயிரறையில்
ஊற்றிக் கலந்து..

மூச்சென சேர்த்து வளர்த்த..
முழுப்பாசம் வார்த்து வளர்த்த..
மென்மழலை மாறா
இளந்தளிர்ச் சிறு மகளை..

சட்டென வந்து
சாவு கொண்டு போகுதெனில்..
சாவுன்னைச் சாகடிக்க
வரமெனக்கு வாராதா..

குழந்தைகள் மரணிக்கிற நொடியில்
கடவுளுக்கு இதயமில்லை..

குழந்தைகளை மரணிக்கிற வரையில்
கடவுளே இல்லை இல்லை..

உடலெடுத்தும் உதவாத
உயிர் வாழவே கூடாத..
ஜீவன்களோ நிறைய உண்டு உலகிலே..

பால் மணம் மாறாத..
சூதொன்றும் அறியாத
பிள்ளை உயிர் கொள்ளாதே காலனே..

தோழியவள் கண்ணீரின்
சூடு தாங்கா கவி நெஞ்சு..
வேதனை தாளாது
கட்டளை ஒன்றிடுகிறது..

ஈடு செய்ய முடியாத
இழப்பிற்கு மருந்தாய்..
வலி கொண்ட இதயம்
இளைப்பாற அவள் வாழ்வில்..

மாறுதலும் நிம்மதியும்
தந்துவிடு காலமே.. – கண்ணீர்
துடைத்து.. கை கொடுத்து..
தேற்றிவிடு காலமே..

பிரியத்தோழி காயத்திரியின் காயத்திற்கும்…
அவள் அருமகளின் ஆத்மாவிற்கும்…


வீரிய விதை..

பிப்ரவரி 23, 2013

வீரிய விதை..

கொன்றுத் தீர்ப்பது என
முடிவெடுத்த பிறகு..
குழந்தைகள் என்ன..
பெண்கள் என்ன..
பெரியவர்கள் என்ன..

மொத்தம் அழிப்பது என
துணிந்துவிட்ட பிறகு..
பூக்காடு என்ன..
முட்காடு என்ன..
பறவைக் கூடு என்ன..

கூறு போட்டு.. கூட்டம் கூட்டி..
திட்டமிட்ட.. எண்ணப்படி..
மிச்சமின்றி உங்களால்..
ஒட்டுமொத்தம் தேடித்தேடி..
வேரறுத்தல் நடக்கும்.. – இந்த
சகமழித்தல் பலிக்கும்..

மொத்தத்தையும் அழித்தாலும்..
மீதமின்றி முடித்தாலும்..
அணுவணுவாய் சிதைத்தாலும்..
அத்தனையும் புதைத்தாலும்..

ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒன்று மட்டும் நிச்சயம்..

எவ்விதமோ.. எப்படியோ..
எவ்விடமோ.. எக்கணமோ..
வீரியத்தை சுயத்தில் கொண்ட..
விடுதலையை உயிர்ப்பில் கொண்ட..

விதை வெடித்து முளைக்கும்..
விருட்சமென நிலைக்கும்..

களைகள் யாவும் மரிக்கும்..
மீண்டும் பூமி சிரிக்கும்..

( பாலச்சந்திரனின் ஆத்மாவுக்கும்…
பாவிகளின் கர்மாவிற்க்கும்… )


வீடழகு…

பிப்ரவரி 17, 2013

ஒழுங்கென்று சொல்லி
அதை அதை அந்தந்த இடத்தில்
அப்படி அப்படியே வைத்த
ஒழுங்கீனங்களை எல்லாம்.. 

பிஞ்சுக் கரங்களால்
உன் இஷ்டத்திற்கு
அங்கும் இங்குமாய்
கலைத்துப் போட்ட பிறகுதான்.. 

உண்மையில்
அழகாகிறது வீடு..


Follow

Get every new post delivered to your Inbox.