நல்வரவு !

ஜூன் 19, 2008

 

பிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள் !

பிரியன் பக்கங்கள் என்ற தலைப்போடு உயர்ந்துகொண்டிருக்கும் எனது களம் –  தமிழுக்கும், கவிதைகளுக்கும்,  படைப்புகளுக்குமானது…

 

அஞ்சாதே,     காதலில் விழுந்தேன்,     பந்தயம்,     ௮..ஆ..இ..ஈ..,     தநா அல 4777,     ரசிக்கும் சீமானே,     நினைத்தாலே இனிக்கும்,     கதிர்வேல்,     முன்தினம் பார்த்தேனே,     வீரசேகரன்,     மார்கழி 16,   போன்ற…

60 – க்கும் மேற்பட்ட படங்களுக்கும்…
150 – க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும்…
5 – க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும்…
7 – க்கும் மேற்ப்பட்ட கவிதைத் தொகுப்பு புத்தகங்களுக்கும்…
நிறைய விளம்பர வரிகளுக்கும் இடையில்……….

எனது இரவு தூக்கங்களை மொத்தமாய் கொடுத்து இந்த பக்கங்களை  வளர்த்து வருவதற்கு சரியான காரணமுண்டு…

 

தனது படைப்புகளின் மீதான விமர்சனங்களைக் கொண்டுதான் ஒரு 
படைப்பாளி தன் அடுத்த கட்ட பயணத்தின் திசையை தீர்மானிக்கிறான் !

 

ஒரு படைப்பாளியாக எனது திரைத்துறை நண்பர்களிடம் இருந்தும்… தமிழ் இலக்கியத்துறை நண்பர்களிடம் இருந்தும், பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் என் படைப்புகள் மீதான கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்…

 

எல்லாவற்றையும்விட…   எனது படைப்புகளை மட்டுமே தெரிந்த…   என்னைத் தெரியாத…  என் சமூகத்தின்…   சராசரி ரசிகனின்…   ரசிகையின்…   உண்மையான விமர்சனங்களைப் பெறவே நான் விரும்புகிறேன் !

 

எதிர்பார்த்ததற்கு மேலாக… எனது கவிதைகள் மீதான நிறைவான  விமர்சனங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன !   மகிழ்ச்சி…

நதி போல பயணித்துக்கொண்டே இருப்போம் நமக்கான சுவடுகளை நாளைகளுக்கு விட்டபடி…

  

பிரியமுடன்…
பிரியன்…

 


இன்று – 13 / 07 / 2009

ஜூலை 14, 2009

Ninaithaleaudio130709_01

 

விஜய் ஆண்டனி இசையில், கலைஞானி கமலஹாசன் தலைமையில், எனது “செக்சி லேடி…” பாடலோடு  “நினைத்தாலே இனிக்கும்” படத்தின் இசை வெளியீடு…

 

.


புது வரவு..

ஜூன் 20, 2009

 10

 

என்ன செய்வது..
எடை குறைவுதான்..
இருந்தாலும் அதை சரி கட்டத்தான் 
நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு..

 

நிறம் கொஞ்சம் கம்மிதான் என  
யாரோ சொன்னது காதில் விழுந்துவிட்டதைப் போல்..
உடனே பிஞ்சுக் கை கால்களை ஆட்டி ஆட்டி 
நீ சத்தமாய் அழ ஆரம்பித்த பொழுதில்.. 

சிவந்து போன முகம் 
கோபத்தோடு சொல்வதாய் தோன்றியது
“பாத்தியா என் நிறத்தை என்று..”

 

நிர்வாணத்தின் கூச்சம் தெரியாத தெளிவே..
உறக்கத்தில் உருகிச் சிரிக்கும் நிலவே..

 

நகர்ந்து செல்லும் நாள் வராத சூரியனே..
அதனாலென்ன..
எப்போதும் உன்னை சுற்றித்தான் திரிகின்றன 
என் குடும்பத்து மனிதக் கோள்கள் அத்தனையும்..

 

ஒன்றரை அடி கவிதையே..
ஒப்பில்லா உவமையே..
மென் தாமரை தேகம்..
கரு வண்டுக் கண்கள்..
சிவப்பு ரோஜாத்துண்டு உதடுகள்..
பனித்துளி கால் விரல்கள்..
மழைத்துளி கை நகங்கள்..
செம்பருத்தி பாத மத்தி..
நீ இரண்டரை கிலோ புனித சக்தி..

அமைதி.. அழுகை..
ஆட்டம்.. தூக்கம்.. மட்டும் தெரிந்த மகத்துவமே..
 
உன்னால் தினம் தினம் 
திருவிழாக் காலம் போலானது வீடு..

 

பிறந்து சில நாட்களே ஆன 
செல்ல மழலையே..
குட்டிக் கடவுளே..

சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது..
புது வரவே உனக்கு நல்வரவு 
என்ற ஒன்றைத் தவிர…

 

 

.


ஞானம்…

ஜூன் 12, 2009

 

வழக்கமாய் சென்றமரும்
பழக்கமான குளத்துக் கரையில்
நெடுநேரம் மௌனமாய்
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
யாருமில்லை என்று
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..

 

சட்டென வளைந்து நெளிந்து வந்த
அந்த அழகிய அலைகள் 
புத்திக்கு உணர்த்திச் சென்றது..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
காற்று இருக்கும் உண்மையை…

 

.


அம்மா சுட்ட சூயம்…

ஜூன் 5, 2009

 

எத்தனையோ நாளாச்சு
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..

ஆயிரந்தான் தின்பண்டம்
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..

 

அரிசிமாவும் மைதாமாவும்
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்
பக்குவமா கலந்துருட்டி..

கொதிக்க வைச்ச எண்ணையில
முக்கி முக்கி மூழ்கடிச்சு..

இனிக்க இனிக்க சூயத்த
சுடச்சுட எடுத்து வைக்கும்
அம்மா கைய பாத்ததுமே..

 

பசி வந்து பச போல
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள…

உண்மையில அது வந்தது
பசிக்கு இல்ல ருசிக்கு…

 

மழ வந்து தல மேல
நட போடும் நாளுலயும்..

சில்லுன்னுதான் குளிர்காத்து
காதுரசும் நாளுலயும்..

மனசு வாய் திறந்து
வேணுமின்னு கேட்கும் முன்ன..

பாசத்தோட என் தாயி
பத்துப் பத்தா சுட்டு வைப்பா…

 

கொட்டும் மழ சொட்டுரத
எட்டி நின்னு பாத்தபடி..

சூடா ஒரு சூயத்த
எடுத்து கடி கடிக்கயில..

உடம்பெல்லாம் இனிக்கும்..
உசுரெல்லாம் இனிக்கும்..

 

அத்தனையும் அலுங்காம
நாங்க எடுத்து திங்க திங்க..

வைச்ச கண்ணு வாங்காம
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..

 

பத்தாம போகுமுன்னு
நெனச்சாலோ என்னவோ..

ஒருபோதும் அவ ஒன்ன
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..

 

காத்தெல்லாம் அழுக்கான
நகரத்து வாழ்கையில..

ஓயாம நாங்க தினம்
நசுங்கி திரியும் வேளையில..

 

வயக்காத்தும் புல்நாத்தும்
சுவையான சுன ஊத்தும்..

சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்
எதமான கிராமத்த..

 

அப்பப்போ சூயம் தந்து
புத்திக்கு நெனப்பூட்டும்
என்ன பெத்த சத்தியமே..
தாயான தத்துவமே..

வயசாகிப் போனாலும்
வாடாத மல்லிகையே..

 

மாசம் ஏழு கடந்திருச்சு..
மழைக்காலம் நெருங்கிருச்சு..

மனசோட மத்தியில
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு.. 

 

எத்தனையோ நாளாச்சே
நம்மூரு நெனப்பு வந்து..

என் தாயே..
எத்தனையோ நாளாச்சே
நீ சூயம் சுட்டுத் தந்து…

 

 

எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்…

 

என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்……..

 

பிரியமுடன்..
பிரியன்…

 

.


நிலவின் மனம்…

ஜூன் 1, 2009

எட்டடுக்கு மாளிகை
கட்டி வைத்த மாடி தாண்டி 
வட்டமிட வராத
வானத்து வெண்ணிலவு.. 

கூறு போட்ட குடிசை வீட்டு
குட்டிக் குட்டி கிழிசல் வழியே
இஷ்டத்தோடு நுழைந்து வந்து 
கட்டாந்தரையில் படுத்துறங்கும்…

 

கொஞ்சம் குறுந்தொகையை ஞாபகப்படுத்தும் என் பிரியத்திற்குரிய எனது கவிதை இது !!!

.


காற்றுப் பூசாரி…

மே 25, 2009

யாருக்கும் அடங்காத 
பேய் பிடித்த பெண் போல 
தலை விரித்தாடும் தென்னை மரம்..

காற்றுப் பூசாரியிடம் மட்டும்
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…

 

 .


கடல் சார்ந்த கவிதைகள்..

மே 20, 2009

 

1.

கடற்கரையின் மணல்வெளியில்
நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்
கலைந்த முடி சிறுமி ஒருத்தி..

சட்டென தனது பணி நியாபகம் வந்தவளாய்
நண்டுகளை விட்டு
சோகத்தோடு எழுந்து சென்றாள்
வழக்கம்போல் பிச்சை எடுக்க….

  

 

2.

உனக்கென நான் கடற்கரையில்
காத்திருக்கும் வேளையில்..

ஒவ்வொரு அலையும் ஓடி வந்து
அப்படியே காட்டிச் செல்கிறது
அடிக்கடி உன் முகத்தை..

கரையில் இருக்கும் எனக்கு
நுரையில் முத்தங்கள்
அனுப்பி வைத்தாயோ நீ…

ஈரம் காய்வதற்குள்
இன்னும் வேண்டும் ஒன்று…

 

 

 3.

எத்தனை நாளாயிற்று
உன்னைப் பார்த்தென
ஆசையோடு நான் சென்று நின்ற வேளை..

சுடச்சுட சூரியனை
தின்றுகொண்டிருந்தது கடல்..

ஆனாலும் மறக்கவில்லை 
என் கால்களை வருடிக் கொஞ்ச….

 

 

 4.

உடைந்த மரத்துண்டு ஒன்றை
உருட்டி விளையாடியபடி வந்த அலைகள்..

சட்டென பாய்ந்து என் கால்களுக்கடியில்
மண்ணைக் கரைத்து விழ வைக்க முயன்று
ஆட்டம் போட்டு விலகிச் செல்கின்றன
கூட்டமாய் நிற்கும் பெண்களைப் பார்த்து
சத்தமாய் சிரித்துக்கொண்டே..

 

.


வலி மிக்க 7 கவிதைகள்…

மே 15, 2009

 
இதற்குமேல் என்னால் அடைத்து வைக்க முடியாது…..
நானே தடுத்தாலும் என் கவிதைகள் இனியும் நிற்காது…..

 

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளின் புதல்வர்கள்..

கஞ்சிக்கு வழியின்றி.. அடிப்படை மனித உரிமைகள் கூட கிடைக்காமல்..
அகதிகளாய் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்களை…

இன்னும் உரக்க.. இன்னும் இன்னும் உரக்க..
உலகை உலுக்க.. சொல்லித்தான் தீரவேண்டும்…

 

எந்த பாவமும் செய்யாமல்.. தமிழர்களாய் பிறந்ததற்காய்..
அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு.. அநாதைகளாகி அழிந்துவரும்..
எம் இலங்கைத் தமிழருக்கு…….

“என்ன செய்வதாய் உத்தேசம்…”  

 ”சாவு பெரிதில்லை…”  

“கடவுளைய்யா வாருமைய்யா…” 

 ”வலிகளின் முனகல்கள்…” 

“ஈழத் தமிழச்சியின் கேள்வி…” 

 ”வலியின் வலி…” 

” மானப் பசி…”

என்னும் தலைப்புகளில் பின்வரும் இந்த   7  கவிதைகளை
மனது நிறைய வலியோடு சமர்ப்பிக்கிறேன்……

 

விரைவில் அவர்களுக்கு விடியல் வரும் எனும் நம்பிக்கையோடு…

பிரியமுடன்…
பிரியன்…

 

 

.


என்ன செய்வதாய் உத்தேசம்….

மே 15, 2009

 

அமைதியாய் வாழ்ந்த எம் மக்களை..
நடுக்கடலில் பசிப்பட்டினியோடு 
கள்ளத் தோணியேறி திக்குத் தெரியாது
திணறித் தத்தளிக்க வைத்தாயிற்று…

 

பரம்பரைகள் பல கண்ட வீடுகளை
சல்லிச் சல்லியாய் நொறுக்கி எறிந்தாயிற்று..

 

பயந்துபோய் பதுங்கு குழிகளுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் ஜீவன்களையும்
தேடிக் கொன்று அதற்குள்ளேயே புதைத்தாயிற்று..

 

அடுத்த தலைமுறைகள்
தளைத்தால்தானே இனமென கருதி
பதின்ம வயதுகளை குறி வைத்து குலைத்தாயிற்று..

 

கட்டெறும்பு கூட்டங்களை நசுக்குவதைப்போல
கதறக் கதற கூட்டம் கூட்டமாய் சிதைத்து வீசியாயிற்று..

 

உம் வீட்டுச் செடிகள் செழித்துப் பூக்க
எம் பிஞ்சுப் பிள்ளைகளின் பிணங்களை
உரமாய் போட்டாயிற்று..

 

மீசை முளைத்தும் முளைக்காத 
வாலிப சடலங்களின் கரங்களில்
துப்பாக்கிகளைத் திணித்து தீவிரவாதிகளாக்கியாயிற்று..

 

வயதுக்கு வராத சின்னஞ்சிறு பெண்களையும்
சிதைத்து சீரழித்து மகிழ்ந்தாயிற்று..

 

பொழுதுபோய் பொழுது வந்தால்
உயிர் வாழ்தல் நிச்சயமற்று
கலங்கித் தவிக்கும் நிலைக்கு
எம்மைக் கொண்டு வந்து விட்டாயிற்று..

 

அகிலத்துக்கே முன்னோடியாய் வாழ்ந்த
அரும் பெரும் இனத்தை
அகதிகளாக்கி அங்கும் இங்கும் அலையவிட்டாயிற்று ..

 

எல்லாமும் செய்தாயிற்று..

நாதியற்று நடை பிணங்களாய்
வாழ வழி தெரியாது 
வீடிழந்து நாடிழந்து 
சொந்த பந்தங்கள் இழந்து
மானமிழந்து இனமழிந்து
அனாதைகளாய் நிற்க வைத்தாயிற்று..

 

சரி…
இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்..

மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிர்களையும் உடல்களையும்
சுக்கு நூறாய் கிழித்தெறிய வேண்டுமா..

 

செய்யுங்கள்.. அதையும் செய்யுங்கள்..
அப்படியே செய்யுங்கள்…

ஒன்று மட்டும் நிச்சயம்…
இன்று எம்மினம் சிந்துகின்ற 
ஒவ்வொருத்துளி கண்ணீருக்கும் குருதிக்கும்..

நாளை வட்டியும் முதலுமாய் சேர்த்து 
உமக்குத் திருப்பித் தருமடா காலம்……

 
.


சாவு பெரிதில்லை..

மே 14, 2009

 

ஊரெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள்..
பரிதாபமாய் பறிபோகும் உயிர்கள்..

இறந்த தாய் மார்பிழுக்கும் 
பசித்த பிள்ளைகள்..

அச்சத்தில் கற்பிழக்கும்
இளவயது பெண்கள்..

மலையென குவிந்து கிடக்கும்
மனிதப் பிணங்கள்..

சுடச்சுட நிரம்பிக் கிடக்கும்
குருதிக் குளங்கள்..

அழத் திராணியற்று வற்றிப்போன
கண்ணீர்த் துளிகள்..

அவமானம் அடித்த வலி தாங்கா
ஊமை மனங்கள்..

கூடிக்களித்த உறவுகள் இல்லை..
தாங்கிப் பிடித்த வீடுகள் இல்லை..
ஆடித் திரிந்த நாடின்று இல்லை..
ஆறுதல் சொல்ல யாருமே இல்லை..

அடப்போங்கடா..
இனி சாவதற்கு
எங்களிடம் ஒன்றுமே இல்லை…

 

 

.