ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !
வார்த்தைகளற்ற பரிபாஷைகளோடு
நீள்கின்ற மௌனத்தின்
உரையாடல்களுக்கு மத்தியில்
மதில்சுவர் எழுப்பிக்கொண்டிருக்கின்றன
மங்காத நினைவுகள் !
கருவறையின் கதகதப்பிற்கும்
கல்லறையின் வெதுவெதுப்பிற்கும் இடையில்
நடப்பதென்ன என்பதை அறியாமல்…
கண்டும் காணாத
இருந்தும் இல்லாத ஒன்றை
உணர்ந்தும் உணராமல்
தெரிந்தும் தெரியாமல்
தேடி அலைகிறது…
புதிர்கள் நிறைந்த
புதையலைப் போன்ற
யார் வசமுமில்லாத என் வாழ்க்கை !
புத்தக மூட்டைக்குள்
நெளியும் அந்துப்பூச்சிகளாய்
மெல்ல மெல்ல
உயிரைக் கடித்துத் தின்றபடியே…
ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !
Advertisements