காலை நேரச் சாலை…

நவம்பர் 5, 2009

 

வேலை நாளொன்றில் கண் விழித்த 
அந்த பிரதான சாலையின் மத்தியில்.. 
முந்தைய இரவில்.. 

அடையாளம் தெரியாத வாகனத்தால் 
அடித்துக் கொல்லப்பட்டு.. 
பின் வரும் வாகனங்களால் 
பிய்த்து எறியப்பட்டு..  

சின்னா பின்னமாய் சிதைந்து கிடக்கிறது 
பெயர் தெரியாத ஒரு நாய்க்குட்டி !

 

அது வீட்டு வளர்ப்போ.. 
அல்லது தெரு வளர்ப்போ.. 
கட்டி வைத்தக் கயிறை 
அவிழ்த்துக் கொண்டு வந்த அவலமோ.. 
வேறொரு நாயைக் கண்டு 
எல்லைத் தாண்டியதால் வந்த விபரீதமோ.. 
தெரியாது..

 

ஆனால்.. 
அடிப்படை உடல் அமைப்புக் கூட 
அப்பளமாய் நொறுங்கிப் போக 
இங்கே நசுங்கிக் கிடக்கிறது அது !

 

அந்த நேரத்தில்  
சாலையோரத்தில் தேங்கிய நீரில் 
அவசரக் குளியல் போட வந்த 
அத்தனைக் காகங்களுக்கும் 
அடித்தது யோகம் !

 

இன்று அவைகள் 
வேறெங்கும் அலைந்து திரிய வேண்டியது இல்லை 
காலை உணவுக்காய்..

 

ஆனால் அவை ஒரு குட்டிச் சதையை 
சாலை மத்திக்குச் சென்று 
கொத்தித் தின்பதற்க்குள்.. 
விரைந்து வரும் இருபது வாகனங்களில் இருந்து 
தப்பித்து உயிர் பிழைக்க வேண்டி இருந்தது !

 

தலைத் தெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களின் 
ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளிகளில் 
அவை பார்த்துப் பார்த்து பறந்து கொண்டிருந்தன 
தமக்கு கிடைத்த இரை மீதான இலக்குடன் !

 

சட்டென ஒரு சத்தம்.. 
சின்னதாய் ஆனால் தெளிவாய்..
பகிர்ந்துண்ண பறந்துக் கொண்டிருந்த 
காகங்களில் ஒன்று.. 
பார்வையற்ற பழைய வண்டியில் மோதி 
பரிதாபமாய் இறந்து கொண்டிருந்தது !

 

வேலைநாள் காலை அவசரத்தில் 
சுழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு 
சக மனிதர்களே கண்ணுக்குத் தெரியாது.. 
பாவம் இந்தக் காகமும் நாயும் எம்மாத்திரம் !

 

பசியோடு ஒவ்வொரு நொடியும் 
உயிரோடு போராடி 
அடுத்து வரும் வாகனங்களில் 
எந்த நொடியிலும் 
அடிபடலாம் என்ற சூழலிலும்.. 

தன் உணவுக்காய் உயிரைப் பணயம் வைத்து 
பறந்து கொண்டிருக்கும் 
இந்தக் காகங்களைப் பார்த்தவுடன் 
ஒன்று தோன்றியது !

 

ஒவ்வொரு நிமிடமும் 
செத்துச் செத்து பிழைக்கும் 
இந்தக் காகங்களை விட.. 

ஒரே நிமிடத்தில் 
அடிபட்டுச் செத்துப் போன 
அந்த நாய்க்குட்டி அதிர்ஷ்டசாலி !

 

 

 

இறுதியாய் எனக்கொரு கவிதையைத் தந்து விட்டு இறந்து போன அந்த  நாய்க்குட்டிக்கும் காகத்துக்கும் எனதுக் கவிதாஞ்சலி !

 

.


மழைக்காலை வேளை..

அக்டோபர் 28, 2009

 

இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை..
மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும்
சின்னச் சின்ன வண்ணப் பூக்கள்..

 

முற்றிலும் அமைதியான சுற்றுச் சூழல்..
ஏதுவாய் இதயத்தில் ஏகாந்தமான ஒரு நிலை..

 

கண்களைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஈரப் பச்சை..
காதுக்கருகில் பாடும் பெயர் தெரியாத பறவை..

 

மெல்லக் குளிர் தந்து உரசும் கந்தர்வக் காற்று..
சுவாசத்தில் சுகமாய் நுழையும் மண் வாசனை..

 

எதிரில் மெதுவாய் தூறிக்கொண்டிருக்கும் வெள்ளை மழை..
அருகில் அடிக்கடி வந்து வருடிப் போகும் பிள்ளைச் சாரல்..

 

தொலைவில் எங்கோ மெலிதாய் கேட்கும் 
மனதிற்குப் பிடித்தப் பாடல்..

 

இவற்றோடு சேர்த்து சூடாய் 
காதலியவளின் சுந்தர நினைவு..

 

அடடா.. இதை விட.. இந்த பொழுதை விட..
இந்த இயற்கையை விட..
அழகாய் யாரால் எழுதிவிட முடியும் 
ஒரு நல்லக் கவிதையை..

 

.


புத்தம்புது தீபாவளி…

அக்டோபர் 17, 2009

 

பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்..
பள்ளிப் பருவத்து தீபாவளிகள்..
கல்லூரிக்கால தீபாவளிகள்..
இளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை
இந்த வருட தீபாவளி !

இது கொஞ்சம் வித்தியாசமானது..
நிறைய புதுமையானது !

 

விடியற்காலையிலேயே எழுந்து குளித்து..
ஈரத்தை துவட்டி..  நடு வகிடெடுத்து..
பொட்டுக் குங்குமம் வைத்து..
தழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..
கூந்தல் நிறைய பூக்கள் சொருகி..

தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..
என்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் ?
என வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்  
மனைவியானாலும் மாறாத என் காதலி !

 

என்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்
எவ்வளவு ஆசை அவளுக்கு !

எப்போதும் என் பக்கத்திலேயே
என்னையேச் சுற்றி சுற்றி
வந்து கொண்டிருந்தவள்..

நான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த 
அந்தப் பொழுதில் மட்டும்
நிற்கிறாள் பயத்தோடு விலகி..

வீட்டு பூஜை முடித்து..
பலகாரம் பகிர்ந்துண்டு..
பக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..

வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு 
வர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து
அணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..

அவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்
நான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக
இன்னும் பயப்படுவதாய் நடித்து..

மாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..
இருட்டியதும் வானவேடிக்கைகள் ரசித்து..

கம்பி மத்தாப்புகளின்.. புஷ்வானங்களின்..  
சங்குச் சக்கரங்களின்.. வெளிச்சத்தில்
அவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..

இதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான
பரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..

 

கடல் பார்த்து தனிமையோடு 
அமர்ந்திருக்கும் பொழுதில்
அலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..
எப்போதாவது கிடைக்கும்
அரிய பொக்கிஷ தினம் இது..

 

நான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்
என்னை மட்டும் சார்ந்தது..

இது என்னோடு இணைந்த
ஒரு பெண்ணையும் சேர்ந்தது..

 

இது இதுவரை இல்லா தீபாவளி..
நான் இதுவரைக் காணா தீபாவளி..

இதயத்தில் மழை தூறும் தீபாவளி..
மனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..

ஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..
துள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..

ஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..
இருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி..

 

 

தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு…
 

பிரியமுடன்…
பிரியன்…

.


தீபாவளி நினைவுகள்…

அக்டோபர் 15, 2009

 

அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !

 

துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும் மக்களும் !

காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல பண்டிகைக்கும்தான் !

 

எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..

தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..

எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..

இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !

 

அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன் புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம் செய்து ருசித்து..

எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !

 

பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..

சேலை கட்டத் தெரியாமல் கட்டி நிற்கும்
சுடிதார் சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !

 

அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !

பின்.. இருக்கும் வெடிகள் வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள் பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய் சேருவோம்..

 

மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..

வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !

 

அன்று முழுக்க பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் ! 
 

இதையெல்லாம் மெதுவாய் அசைபோட்டபடி
வாசலில் நின்றிருந்த என்னையும்
என் வீட்டையும் ஏதோ ஒரு எதிர்ப்பார்போடு
கண்டும் காணாதது மாதிரி
கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்
சில இள வயதுகள்..

 

அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம்
ஆவலோடு வரக்கூடும்..

எனக்கும் பருவ வயதில்
ஒரு மகள் இருக்கிறாளே…

 

.


?…

அக்டோபர் 12, 2009

 

மேலிருந்து கீழ் விழும் அருவி..
கீழிருந்து மேல் எழும் குருவி..

விழுவதால் சிறிதா அருவி..
எழுவதால் பெரிதா குருவி..

 

.


செல்லத் தொல்லை…

அக்டோபர் 3, 2009

 

ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..

கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..

 

ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..

மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..

 

ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..

சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..

 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..

கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
 

நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…

 

.


விழித்துக்கொள் வீணையாளே…

செப்டம்பர் 27, 2009

 

ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்..
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..
இதெல்லாம் இருக்கட்டும்..

 

கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை 
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..
இதை நீ அறிவாயோ ?

ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..

 

வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய் 
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !

 

மதிப்பெண்களின் பின்னால்  
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில் 
நமக்கு எவ்வளவு பெருமை !

 

ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்
அப்படியே மனப்பாடம் செய்து செய்து
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !

 

யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு 
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான் 
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !

 

படிப்பு முடிந்து சுயமாய் உலகை
அணுகும் பொழுதுதான்
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !

 

எவ்வளவு பெரிய வித்தியாசம்..
இதுவரை படித்த அத்தனையும் 
வெறும் அடிப்படை..
இனி இருப்பதை சமாளிப்பதுதான்
இங்கு வெளிப்படை என 
மனம் காட்டிக்கொடுக்கையில்..
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !

 

அதனால்.. இனியாவது நமது
வேட்டிக்கதைப் பேச்சுக்களை 
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..

அவரவர் விருப்பத்திற்க்கேற்ப 
அவர்கள் விரும்பும் திசையில் 
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த
தொழில்நிலை செயல்முறை நிறைந்த
யதார்த்தம் தப்பாத 
பயனுள்ள பாடத்திட்டங்களை
நம் வருங்காலத் தலைமுறைக்கு
அறிமுகம் செய்வோம் !

பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !

 

கடலைப் பொட்டலம்போல கல்வியையும்
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !

 

இவையெல்லாம் தேவியே
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..

 

நீயோ இன்னமும் உன்
புன்னைகை தவழும் முகம் மாறாமல் 
வீணையை அணைத்துக்கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !

 

நன்றாய் கவனித்துப் பார்..
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..

ஆனால் அதன் தந்திகளை எல்லாம் 
அறுத்து விற்று பல காலமாயிற்று !
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..

 

செல்வியே உன் உன்னதக் கல்வியை
விபச்சாரக் கலவிபோல எண்ணி
விரசமாய் வியாபாரம் பேசி
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

 

கலைமகள் நீ விலைமகளாகும் முன்
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..

 

 
இன்றைய  கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது..  கண்டனத்திற்க்குரியது..  பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்..  அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை  அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்..   இது தகுமா !

 

இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க..  அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது.   இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட  கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.

 

ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே..  இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !

 

.


சுவாசமிழந்த காதல்…

செப்டம்பர் 20, 2009

 

உயிர் மூச்சாய் நின்றவளே..
உடைத்து எனைத் தின்றவளே..

விழி நழுவிச் சென்றவளே..
விதவிதமாய் கொன்றவளே..

 

ஆக்சிஜெனாய் உனை எண்ணி
உள்ளிழுத்து உறைந்து விட்டேன்..

மாயமதை அறியாது
மயங்கி மதி கலங்கி விட்டேன்..

 

வற்றாது வழியுதெந்தன்  
கண்ணிரெண்டில் நீரோடை..

நீ காதலுக்கு தந்துவிட்டாய்
கார்பன்டை ஆக்சைடை…

 

 

காதல் தோல்விக் கவிதைகள் அதிகம் இல்லையென சொல்லி எழுத வேண்டுகோள் விடுத்த ஒவ்வொரு இதயதிற்க்காகவும்…

.


வாழ்வின் சூட்சுமம்…

செப்டம்பர் 15, 2009

 

எழுவதும் விழுவதும் கரைவதும் 
கடலலையின் இயல்பு !

 

கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய்  
கவலைப்பட்டு ஒரு போதும் 
மீண்டும் எழ மறுப்பதில்லை அவை !

 

மீண்டு எழத் தெரிந்தவை மட்டும்தான் 
மீட்டெடுக்கும் தன் வாழ்வின் சூட்சுமத்தை !

 

.


பயணப்படுங்கள்…

செப்டம்பர் 10, 2009

 

ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு 
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு 
பயணித்துக்கொண்டே இருங்கள் !

 

நகர்தலில்தான் இருக்கிறது காலம்.. 
சுற்றுதலில்தான் இயங்குகிறது பூமி.. 

 

நகர்தலற்ற மரம் கூட 
வேர்களாய் மண்ணுக்கடியில் 
பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது..

 

பயணமற்ற வாழ்க்கை 
பயனற்றுப் போகும் !

 

தேடல்களின் முதல் படி 
பயணமாய் அமைகிறது..

 

தெரிந்ததற்கும் தெரியாததற்கும் உள்ள இடைவெளியை 
பயணம்தான் நிரப்புகிறது..

 

பயணப்படுகிறவர்களுக்கு 
அறிதல் விரிகிறது.. 
புரிதல் தெரிகிறது..
வாழ்வின் அர்த்தம் புரிகிறது !

  

அதனால் வீட்டுக் கூண்டுக்குள் வட்டமடிக்காமல் 
இடம் கடந்து எல்லைகள் தாண்டி 
எல்லாப் பக்கமும் உள்ள அனுபவங்கள் சேகரித்து 
அழகியல்கள் பருகி.. 

அன்றாட நாட்களுக்கு புதுமைகள் உணர்த்த 
சலிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் வாழ 
பயணப்படுங்கள்.. 

 

எப்போதும் எங்காவது 
பறவைகளைப் போல 
தூரம் பார்க்காமல் 
பல்வேறு திசைகள் நோக்கி 
பயணப்படுங்கள்..

 

அப்போது பல கேள்விகளுக்கு  
தானாய் பதில்கள் கிடைக்கும்..
அனைத்தும் தெளிவாகும், அழகாகும்..

 

.