சூரியப்பூ….

மார்ச் 2, 2012

 

 

எதிர் திசையில் நீ வருகிறாய்

சூரியனை பின்னால் வைத்துக்கொண்டு..

 

உனது பிம்பம் எங்கும் நிறைந்து வழிந்து

சின்னதாய் சிதறி ஜொலிக்கின்றன

இளங்கதிர்கள்

அந்த மென் காலை வேளையில்..

 

அசைந்து வருகிறாயா மிதந்து வருகிறாயா

உறுதியாய் சொல்ல முடியாத

ஒரு காட்சிக் குழப்பம் அது..

 

பக்கம் வர வர

பசுமை கூடி பச்சையம் கூடி

பல வண்ணங்களில் பூக்கின்றன

என் தோட்டப் பூக்கள்..

 

வருவது நிஜமா என

ஒரு சின்ன மின்னல்

நெஞ்சில் வெட்டி மறைய..

 

கிள்ளிக் கொண்டேன் என்னையே..

நிஜமான அந்த வலி

சுகமானதாய் இருந்தது..

 

நீ நெருங்க நெருங்க

உனக்குப் பின் இருக்கும் சூரியன்

உயரே உயரே சென்று கொண்டு இருக்கிறான்..

 

உனக்காய் நானும் எனக்காய் நீயுமென

புரிந்த புரிதலில்..

எதுவும் பேசாமல் உச்சத்தில் இருந்து

உன்னையும் என்னையும் பார்த்து

சில்லென சிரித்தபடி..

 

 


உன் தினப் பார்வை..

நவம்பர் 5, 2011
 
 
தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..
 
கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..
 
 
மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..  
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..
 
 
.
 
 

மென் வாசனை…

செப்டம்பர் 5, 2011
 
 
மழை வருவதற்கு முன்பே
அதன் வரவை
உலகிற்கு உணர்த்திவிடுகிற
மண் வாசனை மாதிரி….
 
நீ வருவதற்கு முன்பே
உன் வருகையை
உயிருக்கு உணர்த்திவிடுகிறது
உன் மென் வாசனை….
 
 
.
 

என் மையப்புள்ளி…

ஆகஸ்ட் 1, 2011

வாழ்க்கை வாகனத்தில் வட்டம் கொண்டு சுற்றுகின்ற
சக்கரமாய் நானிருந்தாலும்
என் மையப்புள்ளி என்னவோ நீதான்…

.


அந்தரங்கப் புன்னகை…

April 3, 2011

 

முற்றாத இளம் அதிகாலை
ஒரு சூரிய உதயத்தைப் போல
கிழக்கில் நீ நடந்து வருகிறாய்..

பக்கத்தில் வர வர 
கூடிக் கொண்டே போகிறது உன் அழகு..

நானோ அசைவற்ற மரமாய்
உன் வருகையை 
வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நிற்கிறேன்..

வந்து விட்டாய் என்னருகில்..

இப்பொழுது இயல்பாய் இருக்க முயற்சித்து முயற்சித்து 
முடியாமல் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் நானுன் முன்னால்..

அக்கணத்தில் நெருங்கி வந்து நீ சிந்திய
அந்த அந்தரங்கப் புன்னைகைக்கான அர்த்தம்
எனக்கு மட்டும்தான் தெரியும் !

.


சுகப் பயணம்…

மார்ச் 1, 2011
 
 
அருகருகில் அமர்ந்து..
சுற்றம் மறந்து..
 
ஆர்வமாய் தலை சாய்த்துக் கேட்கும்
உன் அகண்ட விழிகளும்..
 
அதன் ஈர்ப்பில் மயங்கி
இன்னும் இன்னும் வளர்ந்துகொண்டே வரும்
என் மெய் பொய் சம்பவக் கதைகளும்..
 
மெல்லிய காற்று வந்து
கலைத்துப் போட்டதில்
சிறகு முளைத்து
என் முகம் உரச வரும்
உன் முன் நெற்றி முடியும்..
 
அதை லாவகமாய்
நுனி விரல்களால்
நீ அடக்கும் அழகும்..
 
சின்னச் சின்ன இயல்பான உரசல்களும்..
சில்லென நீ சிரித்த பொழுது
நான் இயல்பிழந்த கணங்களும்..
 
காதோர கிசுகிசுப்புகளும்..
கண்ணோர குறுகுறுப்புகளும் ..
திகட்டாத தித்திப்புகளுமாய்..
 
இறங்க வேண்டிய இடம் மறந்து
இன்னும் இன்னும் நீள்கிறது
சுவாரஸ்யமான நம்
புறவழிப் பேருந்து பயணம்…
 
.

சாதலற்ற தேடல்…

பெப்ரவரி 14, 2011
.
உன் உள்ளங்கை ரேகை எனும்
ஒற்றையடிப் பாதை வழியே
தொடரும் என் பயணத்தில்
எனக்கான வழித்துணையாய்
எப்போதும் வருவது
உன் நினைவுகளன்றி 
வேறென்ன சகியே..
 
உன் உச்சந்தலை வகிடு வழியே
உயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள்  
உன்னத மெல்லிசை சிந்த
உன் வெட்கங்கள்தானடி ஜதியே..
 
சாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு…
 
பிரியமுடன்…
பிரியன்…
.

நடை…

ஜனவரி 10, 2011

 

நடப்பது என்னவென்றே புரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்..

என்னை உரசியபடி 
நீ நடந்து வந்துகொண்டிருப்பதால்..

.


உன்னைத் தொடர்தல்…

December 20, 2010

 
பசுமையான மரங்கள் அடர்ந்த அந்த சாலையில்
தனியே நடந்து போவது வேண்டுமானால் 
நீயாக இருக்கலாம்..

ஆனால்.. உன்னைத் தொடர்ந்து 
உன் கூடவே மிதந்து வருவது
ஒரு பறவையின் பாடல் சத்தமும்
என் இதயத்தின் மொத்தமும்..

.


நல்வரவு…

December 5, 2010

 

ஒரு மழைக்கால வேளையில் 
என் அறைக்கதவை ஆசையாய்
திறந்தபடி நுழைவது
அவளாகவும் இருக்கலாம் 
சில்லென்ற காற்றாகவும் இருக்கலாம்..
இரண்டும் ஒன்றுதான்..

.


Follow

Get every new post delivered to your Inbox.