வாழ்க தமிழினம்…

April 12, 2012

 

நிலா நிலா ஓடி வா என்கிறது தமிழ்..
rain rain go away என்கிறது ஆங்கிலம்..

அன்பிற்கான ஆதாரமாய்
அம்மாவில் தொடங்குகிறது தமிழ்..

ஆதாம் ஏவாள் தவறுக்கான
ஆப்பிளில் தொடங்குகிறது ஆங்கிலம்..

என்றாலும் நமக்கு நம் பிள்ளைகள்
அம்மா அப்பா என்று அழைத்தால் கோபம்
மம்மி டாடிதான் சந்தோசம்..

வாழ்க தமிழ் மக்கள்..
வளர்க தமிழினம்..

 

.

சொந்த மண்ணில் சொந்த மொழி பேசக் கூசுகிற கேவலம் விரைவில் மாறும் நாள் வரும்.. விடியல் காணும் நாள் வரும்..
.
உயிரென.. மூச்சென.. உயிரையும் மூச்சையும் விட உயர்ந்த உன்னத சுயமென உள்ளே என்னுள்ளே நம்முள்ளே நிறைந்திருக்கும் சுத்தத் தாய்மொழித் திருநாள் வாழ்த்துக்கள்..
.


சூரியப்பூ….

மார்ச் 2, 2012

 

 

எதிர் திசையில் நீ வருகிறாய்

சூரியனை பின்னால் வைத்துக்கொண்டு..

 

உனது பிம்பம் எங்கும் நிறைந்து வழிந்து

சின்னதாய் சிதறி ஜொலிக்கின்றன

இளங்கதிர்கள்

அந்த மென் காலை வேளையில்..

 

அசைந்து வருகிறாயா மிதந்து வருகிறாயா

உறுதியாய் சொல்ல முடியாத

ஒரு காட்சிக் குழப்பம் அது..

 

பக்கம் வர வர

பசுமை கூடி பச்சையம் கூடி

பல வண்ணங்களில் பூக்கின்றன

என் தோட்டப் பூக்கள்..

 

வருவது நிஜமா என

ஒரு சின்ன மின்னல்

நெஞ்சில் வெட்டி மறைய..

 

கிள்ளிக் கொண்டேன் என்னையே..

நிஜமான அந்த வலி

சுகமானதாய் இருந்தது..

 

நீ நெருங்க நெருங்க

உனக்குப் பின் இருக்கும் சூரியன்

உயரே உயரே சென்று கொண்டு இருக்கிறான்..

 

உனக்காய் நானும் எனக்காய் நீயுமென

புரிந்த புரிதலில்..

எதுவும் பேசாமல் உச்சத்தில் இருந்து

உன்னையும் என்னையும் பார்த்து

சில்லென சிரித்தபடி..

 

 


செய்.. அல்லது செய்..

பெப்ரவரி 22, 2012

அறிவை விரிவு செய்..

ஆற்றலை ஒழுங்கு செய்..

அழகை நுழைவு செய்..

அறிவுரை நடவு செய்..

 

வித்தைகள் தெரிந்து செய்..

விஷயங்கள் அறிந்து செய்..

விவரங்கள் புரிந்து செய்..

செய்வதை தெளிந்து செய்..

 

அனைத்தையும் பதிவு செய்..

அனுபவம் கலந்து செய்..

நிகழ்நொடி உணர்ந்து செய்..

முழுதென நிறைந்து செய்..

 

கற்பனை இனிக்கச் செய்..

உண்மையும் இருக்கச் செய்..

எழுத்துக்கள் மணக்கச் செய்..

என்றைக்கும் நிலைக்கச் செய்..

 

தயக்கங்கள் அழித்து செய்..

தவறுகள் ஒழித்து செய்..

உள்ளுக்குள் விழித்து செய்..

செவ்வென செழித்து செய்..

 

உன்னத தன்மை செய்..

உயிருக்குள் மென்மை செய்..

உலகுக்கு நன்மை செய்..

உனக்குள்ளே உன்னை செய்..

 

செய்.. நல்லது செய்.. – நீ

செய்.. அல்லது செய்..


எங்கள் தேசம் என்றும் வெல்லட்டும்..

ஜனவரி 29, 2012
ஊழலற்ற இந்தியா மீதான கனவை நிஜமாக்க லோக்பால் அவசியமென அடித்தட்டு மக்களும் ஆணித்தரமாய் நம்பும் இவ்வேளையில்.. அதற்கான தீப்பொறி கிளப்பிய சாதாரண அசாதாரணன் அன்னா ஹசாரே குறித்த.. நாளைய இந்தியா குறித்த.. மறுமலர்ச்சி குறித்த ஒரு விழிப்புணர்ச்சிப் பாடல்.. அடியேன்  வரிகளில்.. ஸ்ரீ சரண் இசையில்..

http://www.youtube.com/watch?v=–AytH92Q_E

உருப்படியாய் சில துளி பொழிந்த மகிழ்வு..   :)

இலவச தமிழ் நூல்கள்… :)

ஜனவரி 26, 2012
இதயம் இனிக்கும் இனிய தமிழ் நூல்களை இலவசமாய் பதிவிறக்கம் செய்து படித்து மகிழ.. மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் அரிய வாய்ப்பை தந்திருக்கிறது.. அதற்கு அடியேனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..
http://projectmadurai.org/pmworks.html
வாழட்டும்.. வளரட்டும்.. தாய்மொழி… எம் தமிழ் மொழி..
.

போகி..

ஜனவரி 14, 2012
வெளிச் சுத்தத்தோடு..
மனக் குப்பைகளையும்..
இதய அழுக்குகளையும்..
மிச்சமின்றி நீக்கி..
உள்ளத் தூய்மை கொள்வதே..
உண்மையான போகி..

 

வேண்டாததை  எரித்து
வேண்டிய காற்றை மாசுபடுத்தாமல்..
கனிவாய் கொண்டாடுவோம் போகியை..
வாழ்த்துக்கள்…  :)
.

பிரத்தியேக பக்கம்..

ஜனவரி 5, 2012

 

இது அடியேனது பிரத்தியேக பக்கம்.. சந்திப்போம்.. அங்கும்…

 

http://www.facebook.com/#!/pages/Piriyan-Lyricist/271931312834926

 

நன்றி..

 


2012 – நாளைய இந்தியா..

December 31, 2011

நம் மூவர்ணக் கொடியில்

முக்கால்வாசி கறைகள்..

திணறத் திணற ஊழல்கள்..

விலைவாசி உயர்வு சாபங்கள்..

என்னவொரு கேவலம்..

எண்ணுகிறோம் நாமளும்..

படிந்த கறை அத்தனைக்கும்

காரணங்கள் யாரைக் காட்ட..

ஒரு சிலரின் வஞ்சகமா..

சமூகத்தின் அலட்சியமா..

சக மனிதா உண்மை சொல்..

வளர்ச்சி இனி சாத்தியமா..

ஒற்றுக் கொள்வோம் நண்பர்களே..

தவறில் பங்கு நமக்கும் உண்டு..

இல்லை இல்லை என்றாலும்..

உள் மனது உரக்கச் சொல்லும்..

நாம் செய்த பிழை என்ன..

அதை இதயம் உணர்ந்து துள்ளும்..

தனி மனிதன் செய்கின்ற

சின்னச் சின்னப் பிழைகள் சேர்ந்து

போட்டு விட்ட ஓட்டை..

உலுக்குதிந்த நாட்டை..

இதற்குண்டா தீர்வொன்று..

இருளென்றால் ஒளி உண்டு..

விடிவுக்கு வழி உண்டு..

இனி ஒரு விதி செய்தால்..

புதிதாகும் நாடின்று..

காசு பணம் தேடித் தேடி..

காலமெல்லாம் ஓடி ஓடி..

ஐம்புலன்கள் மூடி மூடி..

அடிமை போல வாடி வாடி..

வாழும் வாழ்வை நாளும் சாடி..

அன்பு வழியை நாடுவோம்..

சுய கொள்கை தன்னை சூடுவோம்..

தன்னை மதித்து வாழுவோம்..

மனசாட்சி ஜெயிக்க மீளுவோம்..

தனி மனித ஒழுக்கம்..

சுய உணர்வு சுத்தம்..

இந்த மாற்றம் போதும்..

மனித மனம் மாறும்..

மனித மன மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

இனத்தின் குண மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மாநிலத்தின் மாற்றம்..

மொத்த தேசம் காணும் மாற்றம்..

எளிதாகும் முன்னேற்றம்..

ஒவ்வொரு மனிதனும் மாறுவோம்..

ஒட்டு மொத்த தேசத்தையும் மாற்றுவோம்..

விந்தையா இது என வியக்கும் வண்ணம்

இந்தியா உயர்வேறும் திண்ணம்..

வாழ்க தமிழ் மொழி..

வளர்க பாரதம்..

நாளைய இந்தியா குறித்து “இனி ஒரு விதி செய்வோம்” எனும் தலைப்பில் இமயம் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை இது…

பிரியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களோடு…


அலை பிழை..

December 26, 2011
கால் நனைத்துக் கொஞ்சும் அலை..
ஆள் இழுத்துச் சென்ற நிலை..
பாழ் இதென்று நெஞ்சு உலை..
பதறுகின்ற நேரக்கிளை..
முறிந்த அந்த நிமிடங்களை..
எண்ண எண்ண கண்ணில் மழை..
மீண்டும் அந்த தருணங்களை..
பிழை அலை உன் அலை பிழை
நீ விட்டுத் தொலை..
.
பிஞ்சுப் பிள்ளைகள் முதல்.. நெஞ்சுக் கனவுகள் வரை.. வாரி எடுத்துச் சென்ற கடல் பசியில்.. கணக்கின்றிக் கரைந்த அத்தனை  இதயங்களுக்கும் சமர்ப்பணம்…….
.

Follow

Get every new post delivered to your Inbox.