அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !
துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும் மக்களும் !
காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல பண்டிகைக்கும்தான் !
எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..
தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..
எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..
இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !
அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன் புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம் செய்து ருசித்து..
எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !
பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..
சேலை கட்டத் தெரியாமல் கட்டி நிற்கும்
சுடிதார் சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !
அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !
பின்.. இருக்கும் வெடிகள் வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள் பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய் சேருவோம்..
மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..
வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !
அன்று முழுக்க பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் !
இதையெல்லாம் மெதுவாய் அசைபோட்டபடி
வாசலில் நின்றிருந்த என்னையும்
என் வீட்டையும் ஏதோ ஒரு எதிர்ப்பார்போடு
கண்டும் காணாதது மாதிரி
கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்
சில இள வயதுகள்..
அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம்
ஆவலோடு வரக்கூடும்..
எனக்கும் பருவ வயதில்
ஒரு மகள் இருக்கிறாளே…
.
12:03 மு.பகல் இல் அக்டோபர் 23, 2009 |
உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.
ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.
http://naamtamilar.wordpress.com/2009/10/14/தீபாவலியும்-தமிழரும்/