எத்தனையோ நாளாச்சு
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..
ஆயிரந்தான் தின்பண்டம்
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..
அரிசிமாவும் மைதாமாவும்
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்
பக்குவமா கலந்துருட்டி..
கொதிக்க வைச்ச எண்ணையில
முக்கி முக்கி மூழ்கடிச்சு..
இனிக்க இனிக்க சூயத்த
சுடச்சுட எடுத்து வைக்கும்
அம்மா கைய பாத்ததுமே..
பசி வந்து பச போல
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள…
உண்மையில அது வந்தது
பசிக்கு இல்ல ருசிக்கு…
மழ வந்து தல மேல
நட போடும் நாளுலயும்..
சில்லுன்னுதான் குளிர்காத்து
காதுரசும் நாளுலயும்..
மனசு வாய் திறந்து
வேணுமின்னு கேட்கும் முன்ன..
பாசத்தோட என் தாயி
பத்துப் பத்தா சுட்டு வைப்பா…
கொட்டும் மழ சொட்டுரத
எட்டி நின்னு பாத்தபடி..
சூடா ஒரு சூயத்த
எடுத்து கடி கடிக்கயில..
உடம்பெல்லாம் இனிக்கும்..
உசுரெல்லாம் இனிக்கும்..
அத்தனையும் அலுங்காம
நாங்க எடுத்து திங்க திங்க..
வைச்ச கண்ணு வாங்காம
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..
பத்தாம போகுமுன்னு
நெனச்சாளோ என்னவோ..
ஒருபோதும் அவ ஒன்ன
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..
காத்தெல்லாம் அழுக்கான
நகரத்து வாழ்கையில..
ஓயாம நாங்க தினம்
நசுங்கி திரியும் வேளையில..
வயக்காத்தும் புல்நாத்தும்
சுவையான சுன ஊத்தும்..
சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்
எதமான கிராமத்த..
அப்பப்போ சூயம் தந்து
புத்திக்கு நெனப்பூட்டும்
என்ன பெத்த சத்தியமே..
தாயான தத்துவமே..
வயசாகிப் போனாலும்
வாடாத மல்லிகையே..
மாசம் ஏழு கடந்திருச்சு..
மழைக்காலம் நெருங்கிருச்சு..
மனசோட மத்தியில
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு..
எத்தனையோ நாளாச்சே
நம்மூரு நெனப்பு வந்து..
என் தாயே..
எத்தனையோ நாளாச்சே
நீ சூயம் சுட்டுத் தந்து…
எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்…
என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்……..
பிரியமுடன்..
பிரியன்…
.