1.
கடற்கரையின் மணல்வெளியில்
நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்
கலைந்த முடி சிறுமி ஒருத்தி..
சட்டென தனது பணி நியாபகம் வந்தவளாய்
நண்டுகளை விட்டு
சோகத்தோடு எழுந்து சென்றாள்
வழக்கம்போல் பிச்சை எடுக்க….
2.
உனக்கென நான் கடற்கரையில்
காத்திருக்கும் வேளையில்..
ஒவ்வொரு அலையும் ஓடி வந்து
அப்படியே காட்டிச் செல்கிறது
அடிக்கடி உன் முகத்தை..
கரையில் இருக்கும் எனக்கு
நுரையில் முத்தங்கள்
அனுப்பி வைத்தாயோ நீ…
ஈரம் காய்வதற்குள்
இன்னும் வேண்டும் ஒன்று…
3.
எத்தனை நாளாயிற்று
உன்னைப் பார்த்தென
ஆசையோடு நான் சென்று நின்ற வேளை..
சுடச்சுட சூரியனை
தின்றுகொண்டிருந்தது கடல்..
ஆனாலும் மறக்கவில்லை
என் கால்களை வருடிக் கொஞ்ச….
4.
உடைந்த மரத்துண்டு ஒன்றை
உருட்டி விளையாடியபடி வந்த அலைகள்..
சட்டென பாய்ந்து என் கால்களுக்கடியில்
மண்ணைக் கரைத்து விழ வைக்க முயன்று
ஆட்டம் போட்டு விலகிச் செல்கின்றன
கூட்டமாய் நிற்கும் பெண்களைப் பார்த்து
சத்தமாய் சிரித்துக்கொண்டே..
.