காதலின் கதை…

 

மனது முழுக்க நிறைந்திருக்கும்
வாஞ்சையான வரிகளை
காற்றலைகளில் பாடலாக்கி
பரவசப்பட்டுக் கொண்டிருக்கும்
என் நளினமான நாட்களுக்கிடையில்..

எழுத்தைத் தவிர எதுவும்
தோன்றியதில்லை எனக்கு பெரிதாக…

 

பல சமயங்களில்
எனது வார்த்தைகளின் வசீகரத்தில் வளைந்து
என்மேல் ஆசைத் தூறல் தூவிய
மெல்லின மேகங்களுக்கெல்லாம்.. 

மௌனத்தை மட்டுமே பதிலாய் தந்து
மறுபடி எழுத்துக்குள் புதைந்துவிடுவது
எனது நெடுநாள் வழக்கம்…

 

எனது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
கவிதைகளுக்கான காலமாய்
கச்சிதமாய் கரைந்துகொண்டிருந்த சமயத்தில்…

பலபேர் போல் அவளும் அறிமுகமானாள்
எந்தன் ரசிகையாய்..

 

ரசனைகளின் பரிமாற்றம்
தோழமையாய் தோற்றம் எடுத்தது…

அந்த கண பிழையில்லா பகிர்தல்களின் மத்தியில்
ஒன்றை மட்டும் முழுதாய் உணர்ந்துகொள்ள முடிந்தது..

இருவருக்குமான எண்ண அலைகள்
ஒன்றென்பதுதான் அது….

அப்பொழுது நிறைவாய் நான்
அவளிடம் கூறியது ” நீ என் நகல்…
என்ற ஒன்றைத்தான்…

 

எந்த சலனமும் இன்றி
நட்போடு நகர்ந்துகொண்டிருந்த
அந்த கண்ணியமான காலங்களில்
பழகிவிட்டிருந்தோம் இருவர் வீடுகளிலும்..

 

ஆழ ஆழ அடர்ந்துகொண்டிருந்த
எங்கள் பழகுதல்களின் பாரம் தாங்காமல்
ஒருநாள் இதழ் விரித்து அவள் சொல் மலர்ந்தாள்..

உங்கள் கவிதையும் காதலும்
வேண்டும் என் வாழ்நாள் முழுதும்…
” என…….

ஆம்.. தன் மொத்தக் காதலையும்
இந்த கவிஞனிடம் அழகாய் வரிகளில் வார்த்துவிட்டாள்..

சட்டென சின்ன புன்னகையைத் தவிர
அப்பொழுது பதிலாய் தர ஏதுமில்லை என்னிடம்..

 

நிறைய அவகாசங்களுக்கும்..
நிறைய பரிமாற்றங்களுக்கும்..
நிறைய நிறைய கலந்துரையாடல்களுக்கும் பிறகு..

சொல்லித்தான் விட்டேன்
நானும் என் சம்மதத்தை…

 

அடுத்த கட்டம்..
பெற்றவர்களுடனானது..

ஜாதகங்களின்.. சாதிகளின் வேறுபாடுகளால்
இருவரின் பெற்றோரும் நேரில் சந்திக்கும் வரை
கொஞ்சம் நீடிக்கத்தான் செய்தன குழப்பங்கள்..

 

ஒரு கோவிலில் நிகழ்ந்த
அனைவரின் சந்திப்பு
அமைதியாக்கியது அனைத்தையும்…

மெதுவாய் பழகப் பழக பாசமாகி
எங்களுக்கான முழு சம்மதத்தோடு மட்டுமல்லாமல்
திருமணம் செய்வதில் ஆழ்ந்த திருப்தியோடும்
மகிழ்வோடும் இருக்கிறார்கள்  
எங்கள் பெற்றோர்கள் இருவரும்..

 

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
விதைத்து வேர்விட்டு
துளைத்து முளைத்து
செழித்த பாசம்..

திருமண பேச்சுக்களால்
வீசியது பூக்களின் வாசம்…

 

இதோ இத்தனை நாட்களை
வாழ்வதற்கான கர்ப்பகாலமாய் எடுத்து..
இந்த  08 / 03 / 2009  தேதியில்
நாளைகளுக்காக நல்லபடியாக
திருமணமாய் பிரசவமாகி இருக்கிறது
எங்கள் சத்தியக் காதல்…

இனி…
பிரியமுடன் ரம்மியமும்….
 

 

 

 

 

 

பிரியம் நிறைந்த மனதிற்கு பிரியனின் வணக்கங்கள்…

என் கவிதைகளில் மட்டுமல்லாது.. எனது வாழ்விலும் எப்போதுமே நான் வெளிப்படையாய் இருக்கத்தான் விரும்புகிறேன்.. எனது வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் வரைதான் அதற்க்கு மற்றவரை வசீகரிக்கும் சக்தியும் இருக்குமென நம்புகிறேன் நான்…

நான் எனது நாளைகளை தீர்மானிக்க ஒரு வகையில் இந்த பக்கங்களும் காரணம்.. அதனால் அதற்கான வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு நான் எழுதி இருக்கும் இந்த கவிதை கவிஞனின் நிஜ பிம்பம்…………….

 

தங்கள் பார்வைக்காக இத்தோடு எனது திருமண அழைப்பிதழையும் இணைத்திருக்கிறேன்…

என்றும் பிரியமுடன்..
பிரியன்…

pathirikkai-for-blog

2 பதில்கள் “காதலின் கதை…” க்கு;

  1. senthilnathansk சொல்வதென்னவென்றால்:

    congratulation..!!!

  2. veyilaan சொல்வதென்னவென்றால்:

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ப்ரியன்!

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்