சாரல்…

செப்டம்பர் 30, 2008

 

 

இன்று சாரல் தமிழ் இசை ஆல்பத்தின் வெளியீடு…

 

கோப்பக்குமார் இசையில் எனது பாடல்களோடு இன்று முதல்…

 

http://saaral.in


காதலென்னும் புனிதம்…

செப்டம்பர் 30, 2008

 
என்னவளே…

நீ என்னவள் என்பதற்காய்
உன் உடல்கூறுகளை
உரிமை கொண்டாட
என்றுமே முனைந்ததில்லை நான்…

 

அடக்க முடியாத சோகத்தோடு
என்னை நீ கட்டிக்கொள்கையில்…

முழுதாய் என்மேல் அழுந்தும்
உன் மார்பகங்கள்
எனக்கு எந்த கிளர்ச்சியையும்
ஏற்படுத்தவில்லை…

 

அந்நேரத்தில் என் கைகள்
உன் கண்ணீரை
துடைப்பதற்கு மட்டுமே
நீள்கின்றன…

 

சில மௌன நிமிடங்களில்
என் மார்பில்
நீ சாய்ந்திருக்கையில்…

உன் கன்னத்தின் வெப்பம்
இதமாய் இதயத்திற்குள்
இறங்க இறங்க…

காதலி நிலை கடந்து
நீ என் பிள்ளையாகிறாய்
நான் உன் அன்னையாகிறேன்..

 

அதே போல்
உன் மடியில் தலை சாய்த்து நான்
தூங்கிப்போகும் வேளைகளில்…

உன் கைகள் தலையை
வருட வருட…

காதலி நிலை உயர்ந்து
நீ என் அன்னையாகிறாய்
நான் உன் பிள்ளையாகிறேன்…

 

காதல் என்னும் புனிதம்
உடலில் இருந்து உயிர் வரைக்கும்
நமக்குள் நிறைந்து கிடப்பதால்…

காமம் என்னும் மிருகம்
இருக்க இடமின்றி அலைந்துகொண்டிருக்கின்றது
நமக்கு வெளியில்…


காதலில் விழுந்தேன்…

செப்டம்பர் 26, 2008

 

 

இன்று எனது ” டோலே டோலே புயலாய் புறப்படு… “ பாடலோடு…

.

காதலில் விழுந்தேன் படம் வெளியீடு…


நூறாவது நாள்…

செப்டம்பர் 26, 2008

 

பிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள்…

 

100 நாட்கள் – 6000 பார்வையாளர் வருகைகள்…
.

இன்று பிரியன் பக்கங்களின் 100-வது நாள் !

 

இந்த பக்கங்களை இத்தனை வளர்ச்சிக்கு உள்ளாக்கிய அத்தனை இதயங்களுக்கும் வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு….

 

பிரியமுடன்…
பிரியன்…


வலி நிவாரிணி…

செப்டம்பர் 24, 2008

 

உனது வலிகளை
என் மார்பில் தலை சாய்த்து நீ
குறைத்துக்கொள்ள முடியும் என்றால்…

 

என் கைகள் எப்போதும்
காத்திருக்கின்றன
உன் கூந்தலை
மிருதுவாய் வருடிக்கொடுக்க…


உச்சந்தலை முத்தம்…

செப்டம்பர் 24, 2008

 
என் தோள்களில் கன்னம் வைத்து
ஏதேதோ பேசியபடியே
நீ தூங்கிப்போகையில்…

 

உன் உச்சந்தலையில்
மெதுவாய் வைக்கிறேன்
ஒரு பாசமான முத்தம்…

 

ஆழமான அந்த
முத்தத்தின் கதகதப்பில்…

உன் தூக்கத்தின் இடையிலும்
உனக்கே தெரியாமல்
சிரிக்கிறாய் நீ அழகாய்…


முதல் சந்திப்பில்…

செப்டம்பர் 22, 2008

 

என்னிடம் பேசுவதற்காக
யோசித்து வைத்திருந்த
அத்தனை வார்த்தைகளையும் மறந்து…

 

உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க…

உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க…

இதயம் நான்கு மடங்காய் துடிக்க…

என்ன செய்வதென தெரியாமல்…

 

ஒரு சுகமான பதற்றத்தோடு
எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய்
நமக்கான முதல் சந்திப்பில்…


மாயக் குதிரை…

செப்டம்பர் 22, 2008

 

ஒரு செழித்த மாயக் குதிரையின்மேல்
நம்மை அமர்த்தி வைத்திருக்கிறது காலம்…

 

நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
அதன் வேகத்தை குறைக்கவோ
கீழே இறங்கவோ
ஏனோ சொல்லித்தரவில்லை கடவுள்…

 

நாமாய் அந்த மாயக் குதிரையை
அடக்கும் வழியறிந்து
அதை கட்டுக்குள் கொண்டுவந்தால் ஒழிய
வேறு வழியே இல்லை…

 

என்ன மனிதா ?
மாயக் குதிரையை அடக்க
தயாரா நீ…


காதலின் மெல்லிசை…

செப்டம்பர் 21, 2008

 

உன் உள்ளங்கைக்குள்
நான்காய் நீ
மடித்து வைத்திருக்கும்
கைக்குட்டைக்குள்
என் இதயத்தை
யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைத்திருக்கிறாய்…

 

எவருக்கும் சந்தேகம்
வந்துவிடக்கூடாதென
அந்த கைக்குட்டையால்
அடிக்கடி உன் முகத்தை நீ
துடைத்துக்கொள்ளும் பொழுதில்…

 

உன் வியர்வை வாசம் பட்டு
பூக்கின்ற என் இதயம்
இரட்டிப்பாய் துடிப்பதால்…

 

அந்த சத்தத்தை கேட்டவர்கள்
அதை கண்டுபிடித்திடக்கூடும்…

 

அதனால் இனிமேல்
என் இதயத்தை
கைக்குட்டைக்குள் வைப்பதை விடுத்து
உன் இதயத்திற்குள் வைத்துக்கொள்
பத்திரமாய்…

 

அப்பொழுது உன் இதயத்தோடு
சேர்ந்து என் இதயமும்
இரட்டிப்பாய் துடிக்காதா என
நீ கேட்பது புரிகிறதெனக்கு…

 

அடியே…

நமது இரண்டு இதயங்களும்
ஒன்றாய் சேர்ந்து
துடிக்கின்ற வேளைகளில்
எங்கும் பரவும்
காதலின் மெல்லிசை…

 

அதற்கு காற்று இசைக்கும்
காலத்தால் அழியா
பல புதிய பாடல்களை !


காதல் தீவிரவாதி…

செப்டம்பர் 19, 2008

இன்று எனது ” காதல் தீவிரவாதி… “ பாடல் இடம் பெற்றிருக்கும் “ பந்தயம் ” திரைப்படம் வெளியாகிறது !

S.A.சந்திரசேகர் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் பிறந்திருக்கும் எனது மெல்லிசைப் பாடலோடு…

பிரியமுடன்…
பிரியன்…